Saturday, February 13, 2010

ஆயர்பாடி மாளிகையில்..


ஆயர்பாடி மாளிகையில் தாய்மடியில் கன்றினைப் போல்
மாயக் கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ
அவன் வாய் நிறைய மண்ணையுண்டு மண்டலத்தை காட்டியபின்
ஓய்வெடுத்துத் தூங்குகின்றான் ஆராரோ
ஓய்வெடுத்துத் தூங்குகின்றான் ஆராரோ (ஆயர்பாடி)

பின்னலிட்ட கோபியரின் கன்னத்திலே கன்னம் வைத்து
மன்னவன்போல் லீலை செய்தான் தாலேலோ
அந்த மந்திரத்தில் அவர் உறங்க மயக்கத்திலே இவன் உறங்க
மண்டலமே உறங்குதம்மா ஆராரோ
மண்டலமே உறங்குதம்மா ஆராரோ (ஆயர்பாடி)

நாகப்பதம் மீதிலவன் நர்த்தனங்கள் ஆடியதில்
தாகமெல்லாம் தீர்த்துக்கொண்டான் தாலேலோ - அவன்
மோகநிலை கூட ஒரு யோகநிலை போல் இருக்கும்
யார் அவனைத் தூங்க விட்டார் ஆராரோ
யார் அவனைத் தூங்க விட்டார் ஆராரோ

கண்ணனவன் தூங்கிவிட்டால் காசினியே தூங்கிவிடும்
அன்னையரே துயிலெழுப்ப வாரீரோ – அவன்
பொன்னழகை காண்பதற்கும் போதை முத்தம் பெறுவதற்கும்
கன்னியரே கோபியரே வாரீரோ
கன்னியரே கோபியரே வாரீரோ (ஆயர்பாடி)

No comments: