Thursday, February 25, 2010

தீராத விளையாட்டுப் பிள்ளை


வரிகள் : பாரதியார்
ராகம் : ராகமாலிகா
…………………………………..
தீராத விளையாட்டுப் பிள்ளை - கண்ணன்
தெருவிலே பெண்களுக் கோயாத தொல்லை (தீராத)

தின்னப் பழங்கொண்டு தருவான் - பாதி
தின்கின்ற போதிலே தட்டிப் பறிப்பான்:
என்னப்பன் என்னைய்யன் என்றால் - அதனை
எச்சிற் படுத்திக் கடித்துக் கொடுப்பான் (தீராத)

அழகுள்ள மலர்கொண்டு வந்தே - என்னை
அழ அழச் செய்தபின் 'கண்ணை மூடிக்கொள்:
குழலிலே சூட்டுவேன்' என்பான் - என்னைக்
குருடாக்கி மலரினைத் தோழிக்கு வைப்பான் (தீராத)

பின்னலைப் பின்னின் றிழுப்பான் - தலை
பின்னே திரும்புமுன் னேசென்று மறைவான்:
வண்ணப் புதுசேலைதனிலே- புழுதி
வாரிச் சொரிந்தே வருத்திக் குலைப்பான்(தீராத)

புல்லாங்குழல் கொண்டு வருவான் - அமுது
பொங்கித் ததும்புநற் கீதம் படிப்பான்:
கள்ளால் மயங்குவது போலே - அதைக்
கண்மூடி வாய்திறந் தேகேட் டிருப்போம் (தீராத)

No comments: